தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வை


தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில்  பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வை
x
தினத்தந்தி 9 Sep 2021 11:56 AM GMT (Updated: 9 Sep 2021 11:56 AM GMT)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார்.
ஒத்திகை நிகழ்ச்சி
தமிழகம் முழுவதும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை இயக்குநர் கரன்சின்கா உத்தரவின் பேரில் தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் ஆலோசனையின் படி வருவாய்த்துறையினருடன் இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
பயிற்சி
நிகழ்ச்சியில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தங்களை வெள்ள அபாயங்களில் இருந்து காப்பாற்ற உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. தீயணைணப்பு மற்றும் மீட்பு பணித் துறையின் மீட்பு உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மீட்பு உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் என்ஜினுடன் கூடிய ரப்பர் படகுகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினர் கடலுக்கு சென்று கடலில் சிக்கியவர்களை மீட்கும் செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, பேரிடர் வந்தால் எப்படி மக்களை மீட்பது என்பது தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. இதில் விடுகளில் ள்ள பொருட்களை கொண்டு எப்படி உயிரை பாதுகாத்துக் கொள்வது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆக்சிஜன் கொடுத்து எப்படி மீட்பது என்று விளக்கப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் முத்துபாண்டியன், நிலைய அலுவலர்கள் சகயாராஜ், அருள் ராஜ், சுந்தர் ராஜ் மற்றும் தீயணைப்புவீரர்கள், கலந்து கொண்டனர்.

Next Story