ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி


ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 9 Sep 2021 4:47 PM GMT (Updated: 9 Sep 2021 4:47 PM GMT)

திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குளிக்க அனுமதி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் வருடத்தில் 6 மாதம் தண்ணீர் கொட்டும். மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்துவிட்டு செல்வார்கள். 

கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் 

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.  

தற்போது தமிழக அரசு அறிவித்த உத்தரவின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாட்கள் மற்றும் பல்வேறு நாட்களில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் குளிக்க மட்டும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சி பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story