விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி


விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Sep 2021 5:00 PM GMT (Updated: 9 Sep 2021 5:04 PM GMT)

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் படகு சவாரியின்போது விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்தது.

ஊட்டி,

திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் படகு சவாரியின்போது விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி செய்தது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

காதல் ஜோடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் இப்ராஹிம்(வயது 19). கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சின்னவேடம்பட்டியை சேர்ந்த பூங்கொடி(21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக காதல் ஜோடியான இப்ராஹிம், பூங்கொடி ஆகியோர் வந்தனர். இதற்காக அங்குள்ள ஒரு விடுதியில் தங்கினர். 

தற்கொலை முயற்சி

பின்னர் நேற்று காலையில் அவர்கள் ஊட்டி ஏரியில் மிதி படகில் சவாரி செய்தனர். அப்போது ஏரியின் நடுவே திடீரென படகை நிறுத்திவிட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதை கண்ட சக சுற்றுலா பயணிகள் உடனடியாக படகு இல்ல நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மோட்டார் படகில் வேகமாக சென்று, மிதி படகில் இருந்த அவர்களை ஊழியர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 மாத கர்ப்பிணி

இந்த சம்பவம் குறித்து ஊட்டி நகர மேற்கு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கூறியதாவது:- காதல் ஜோடியான இப்ராஹிம், பூங்கொடி ஆகியோரது திருமணத்துக்கு முதலில் பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர். 

இதற்கிடையில் அவர்கள் நெருக்கமாக பழகியதால், பூங்கொடி 2 மாத கர்ப்பிணியானார். இதனால் அவர்களது திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கின்றனர். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story