திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்; லவ் ஜிகாத்தில் கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்; லவ் ஜிகாத்தில் கடத்தப்பட்டதாக பெற்றோர் புகார்
x

மங்களூருவில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் திடீரென மாயமாகவிட்டார். லவ் ஜிகாத்தில் கடத்தப்பட்டதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மங்களூரு: மங்களூருவில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் திடீரென மாயமாகவிட்டார். லவ் ஜிகாத்தில் கடத்தப்பட்டதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

திருமண நிச்சயதார்த்தம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் பர்கி பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமணத்திற்கு தேதியும் குறிக்கப்பட்டது. 
மணமக்கள் தினமும் செல்போனில் பேசி வந்தனர். இதற்கிடையே திருமணத்திற்காக இளம்பெண்ணின் பெற்றோர்கள் தங்கநகைகள் வாங்கி இருந்தனர். திருமணத்துக்கு சில நாட்களே இருந்தது. 

இளம்பெண் மாயம்

இந்த நிலையில் இளம்பெண் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து பெற்றோர், தங்களது மகளை அக்கம்பக்கம், நண்பர்களின் வீடுகளில் சென்று தேடிபார்த்தனர். ஆனால் அவர் அங்கு வரவில்லை என தெரியவந்தது. மேலும் வீட்டில் பீரோவில் திருமணத்திற்காக வாங்கி வைக்கப்பட்ட நகைகள் மற்றும் பணமும் மாயமாகி இருந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகள் நகை, பணத்துடன் காதலனுடன் ஓடி சென்றுவிட்டாளா என்று சந்தேகத்தினர். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர், பர்கி போலீசில் புகார் அளித்தனர். 

லவ் ஜிகாத்

அதில், எனது மகளை வேறு மதத்தை சேர்ந்த வாலிபர் காதலித்துள்ளார். அந்த வாலிபர், எனது மகளை மதம் மாற்றி உள்ளார். அந்த வாலிபரின் மதத்துக்கு மாறிய எனது மகளை வலுக்கட்டாயமாக பெயர் மாற்றம் செய்ய வைத்துள்ளனர். 

லவ் ஜிகாத்தில் எனது மகளை ஏமாற்றி அந்த வாலிபர் கடத்தி சென்றுள்ளார். இதனால் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். லவ் ஜிகாத்தில் சிக்கி உள்ள எனது மகளை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடும் கண்டனம்

இதற்கிடையே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமான சம்பவத்திற்கு பின்னால் லவ் ஜிகாத் இருக்கலாம் என்று மங்களூரு விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சரண் பம்ப்வெல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தற்போது சமுதாயத்தில் லவ் ஜிகாத் தலைதூக்கியுள்ளது. 
இதற்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். போலீசார் உடனடியாக மத மாற்ற கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

Next Story