சட்டமன்ற குழு வருகை மனுக்களை 30-ந்தேதிக்குள் அனுப்பலாம்


சட்டமன்ற குழு வருகை மனுக்களை 30-ந்தேதிக்குள் அனுப்பலாம்
x
தினத்தந்தி 9 Sep 2021 9:19 PM GMT (Updated: 9 Sep 2021 9:19 PM GMT)

தென்காசிக்கு சட்டமன்ற குழு வருகை

தென்காசி:
தென்காசிக்கு சட்டமன்ற மனுக்கள் குழு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்களது மனுக்களை வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பலாம்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மனுக்கள் குழு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2021-2022-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, தென்காசி மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி கூடுவதென முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிபட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை 5 நகல்களில் தமிழில் மட்டும் மனுதாரர் அல்லது மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு ‘தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600009’ என்ற முகவரிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
30-ந்தேதிக்குள்....
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆனால் மனுவில் உள்ள பொருள் தனிநபர் குறை, நீதிமன்றத்தில் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கி கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவையாக இருத்தல் கூடாது.
சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்து கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பியிருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்வமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.
இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வருகிற 30-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
...

Next Story