சேலத்தில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது


சேலத்தில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது
x
தினத்தந்தி 9 Sep 2021 10:26 PM GMT (Updated: 9 Sep 2021 10:26 PM GMT)

சேலத்தில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்
வாலிபர் கொலை
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவர், தனது நண்பர்களுடன் கடந்த 7-ந் தேதி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களை திடீரென சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த வினோத்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பந்தமாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி, சதாம் உசேன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 11 பேர் கைது
தொடர்ந்து வாலிபர் வினோத்குமார் கொலை வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதில் தொடர்புடைய சேலம் குகை பகுதியை சேர்ந்த லோகேஷ்வரன் (வயது 32), கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (19), சுந்தர் (22), அர்ஜூன் (22), புகழேந்தி (22), சுரேஷ் (22), பிரபு (22), மொட்டையன் (20), மதன் (21),  விஜய் (22) மற்றும் 15 வயது சிறுவன் என 11 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story