வெவ்வேறு விபத்துகளில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 4:00 PM GMT (Updated: 10 Sep 2021 4:00 PM GMT)

வத்தலக்குண்டு பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அருண் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பழைய வத்தலக்குண்டுவில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வத்தலக்குண்டு அனுமார் கோவில் அருகே அவர் வந்தபோது, எதிரே எழுவன்பட்டி மில் நோக்கி சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அருண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண் இறந்தார். 
இதேபோல் வத்தலக்குண்டு அருகே ஊத்தாங்கல் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஊத்தாங்கல் புதுப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வழியில் மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. 
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த 2 விபத்துகள் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story