மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது சிறுவன் பலி


மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 10 Sep 2021 6:08 PM GMT (Updated: 10 Sep 2021 6:08 PM GMT)

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவனது பாட்டி படுகாயம் அடைந்தார்.

தோகைமலை
2 வயது குழந்தை
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள பூசாரிபட்டி பாண்டியன்திட்டு பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் செல்வன் (வயது 28). இவரது மனைவி கிருபாவதி. இந்த தம்பதியின் மகன் ஜெய்கிஷோர் (2). இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி தோப்புபட்டியில் உள்ள தனது மாமியார் தமிழரசி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு பஸ்சில் செல்வதற்காக செல்வன், கிருபாபதி, ஜெய்கிஷோர் ஆகியோர் புத்தூர் தோகைமலை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர். இவர்களை வழியனுப்புவதற்காக தமிழிரசி உடன் வந்திருந்தார். அப்போது தமிழரசி தனது பேரன் ஜெய்கிேஷாரை இடிப்பில் வைத்து கொண்டு சாலையோரம் நின்றிருந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதல்
அப்போது அந்த வழியாக கல்லடை ஊராட்சி கீழவெளியூரை சேர்ந்த பாலமுருகன் (50) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தமிழரசி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழரசி மற்றும் ஜெய்கிஷோர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.       இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  
சாவு
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜெய்கிஷோர் நேற்று பரிதாபமாக இறந்தான். தமிழரசிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story