37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன


37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்  நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன
x
தினத்தந்தி 10 Sep 2021 6:14 PM GMT (Updated: 10 Sep 2021 6:14 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை, செப்.11-
மயிலாடுதுறை மாவட்டத்தில்  37 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளித்திருந்தது. அதிகபட்சம் 2 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளை வைத்து அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி மயிலாடுதுறை நகரில் காமராஜர் சாலை, கீழ நாஞ்சில் நாடு, மன்னம்பந்தல், மாயூரநாதர் மேலவீதி உட்பட 17 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்திருந்தனர். காமராஜர் சாலையில் கண்கொடுத்த பிள்ளையார்கோவில் வாசலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை பா.ஜனதா தமிழக மேலிட பார்வையாளர் சுதாகர்ரெட்டி நேரில் வந்து வழிபட்டார். 
பாதுகாப்பு பணி
அப்போது அவருடன் மத்திய அரசின் சென்னை ஐகோர்ட்டு தலைமை வக்கீல்  ராஜேந்திரன், பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கடேசன், நகர தலைவர் மோடி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய தாலுகா பகுதிகளில் மொத்தம் 37 இடங்களில் விநாயகர் சிலை பொது இடத்தில் வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மதியம் முதல் இரவு வரை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரண்மனை தெரு
மயிலாடுதுறை தெற்கு அரண்மனை தெருவில் மேதா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அறிவிக்கப்பட்டது. 
பின்னர் கொழுக்கட்டைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் மயிலாடுதுறை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. 
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story