சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்


சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sep 2021 10:18 PM GMT (Updated: 10 Sep 2021 10:18 PM GMT)

மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றாலைகள்
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் மடத்துக்குளம் பகுதியை சுற்றி அதிக எண்ணிக்கையிலான காற்றாலைகள் உள்ளன. இதனால் காற்றாலைகள் உதிரி பாகங்களை ஏற்றி வரும் வாகனங்கள் அடிக்கடி இந்த சாலை வழியாக வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாயத்துக்கான கதிர் அடிக்கும் எந்திரங்களைக் கொண்டு வரும் வாகனம், பெரிய அளவிலான கிரேன்களைக் கொண்டு வரும் வாகனம், வைக்கோல் ஏற்றி வரும் வாகனம் என அதிக உயரம் கொண்ட வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இந்த சாலையில் செல்கிறது.
அதிக பாரம்
வைக்கோல் உள்ளிட்டவற்றை அதிக அளவில் ஏற்றி வரும் வாகனங்களை போலீசார் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும் அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் அடிக்கடி இந்த பகுதியை கடந்து செல்கிறது. இவ்வாறு செல்லும் வாகனங்கள் சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகளில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் குறுக்கே மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இவ்வாறு சாலையின் குறுக்கே மின் கம்பிகள் கடக்கும் பகுதிகளில், அவை அறுந்து விழுந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story