வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை


வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 5:12 AM GMT (Updated: 11 Sep 2021 5:12 AM GMT)

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி காரில் வந்த 6 மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி காரில் வந்த 6 மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மாநில துைண செயலாளர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (வயது 43).வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சி (தமிமுன் அன்சாரி)  மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். 
 இந்த நிலையில் அவர், நேற்று தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் திடீரென காரில் இருந்து இறங்கி வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் காரில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசீம் அக்ரம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். போலீசார், பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து அவர்கள் வாணியம்பாடி- வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

படுகொலை செய்யப்பட்ட வசீம்அக்ரம் உடல் வேலூரில் இருந்து மீண்டும் கொண்டு வந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து 1 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைப்பு-பதற்றம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து வாணியம்பாடியில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
கொலை செய்யப்பட்ட வசீம் அக்ரத்துக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

Next Story