உத்தமபாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு தடையை மீறி பா.ஜனதா, இந்து முன்னணியினர் ஊர்வலம்


உத்தமபாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு  தடையை மீறி பா.ஜனதா, இந்து முன்னணியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Sep 2021 3:41 PM GMT (Updated: 11 Sep 2021 3:43 PM GMT)

உத்தமபாளையத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி தடையை மீறி பா.ஜனதா, இந்து முன்னணியினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 13 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக  விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்ல அரசு தடை விதித்தது. இதையடுத்து உத்தமபாளையத்தில் சிலைகளை மொத்தமாக லாரியில் ஏற்றி முல்லைப்பெரியாற்றில் கரைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அனைத்து சிலைகளும் லாரியில் ஏற்றப்பட்டது. 
இந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த ஏராளமானவர்கள் திடீரென போலீஸ் தடையை மீறி உத்தமபாளையம் மெயின் பஜாரில் இருந்து பஸ்நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக், இந்து முன்னணி கோட்ட அமைப்பு செயலாளர் கணேசன், உத்தமபாளையம் நகர பா.ஜ.க. தலைவர் தெய்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள் முல்லைப்பெரியாற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story