நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா-பெண் பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா-பெண் பலி
x
தினத்தந்தி 11 Sep 2021 6:03 PM GMT (Updated: 11 Sep 2021 6:03 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் இறந்தார்.

நாமக்கல்:
52 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 49 ஆயிரத்து 467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 469 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 521 ஆக அதிகரித்து உள்ளது.
பெண் பலி
இதற்கிடையே நேற்று 43 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 48 ஆயிரத்து 422 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 621 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 477 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோடு அருகே உள்ள எரையம்பட்டி பகுதியை சேர்ந்த 52 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 478 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story