தர்மபுரி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் 5 பேர் கைது


தர்மபுரி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 6:10 PM GMT (Updated: 11 Sep 2021 6:10 PM GMT)

தர்மபுரி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தியது தொடர்பாக மணமகன் பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தியது தொடர்பாக மணமகன், பெற்றோர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குழந்தை திருமணம்
தர்மபுரி அருகே உள்ள குப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் (வயது 23). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் மகள் ஒருவருக்கும் நேற்று முன்தினம் குப்பூர் பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் 16 வயது ஆன சிறுமிக்கு குழந்தை திருமணம் நடத்தப்பட்டதாக தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடத்தப்பட்டு இருப்பது உறுதியானது.
5 பேர் கைது
இதுதொடர்பாக ஊர் நல அலுவலர் ஜோதிமணி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் குழந்தை திருமணம் நடத்திய இருவீட்டு குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மணமகன் சச்சின், அவருடைய பெற்றோர் மணி (55), வள்ளி (48) சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Next Story