தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,627 வழக்குகளுக்கு சமரச தீர்வு உரியவர்களுக்கு ரூ.4 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டன


தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,627 வழக்குகளுக்கு சமரச தீர்வு உரியவர்களுக்கு ரூ.4 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டன
x
தினத்தந்தி 11 Sep 2021 6:53 PM GMT (Updated: 11 Sep 2021 6:53 PM GMT)

1,627 வழக்குகளுக்கு சமரச தீர்வு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி சசிக்குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி அசோக்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜா, ஓய்வு பெற்ற நீதிபதி பிச்சை ஆகியோர் கொண்ட 2 அமர்வுகளும், மாவட்டத்தில் உள்ள தாலுகா நீதிமன்றங்களில் 4 அமர்வுகளும் என மொத்தம் 6 அமர்வுகளில் நடைபெற்றது. இதில் நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 1,627 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. சுமார் ரூ.4 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 556 வழங்கப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
 அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  அறந்தாங்கி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி கவிதா தலைமை தாங்கினார். அறந்தாங்கி மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தோசம், குற்றவியல் நீதித்துறை நடுவர் சசீன்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் நீதிமன்ற நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், செக்மோசடி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 355 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 லட்சத்து 66 ஆராயிரத்து 600 வழங்கப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

Next Story