மல்லித்தழை கட்டுக்குள் இருந்த கட்டுவிரியன் பாம்பு


மல்லித்தழை கட்டுக்குள் இருந்த கட்டுவிரியன் பாம்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 7:37 PM GMT (Updated: 11 Sep 2021 7:37 PM GMT)

தஞ்சை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மல்லித்தழை கட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருந்ததால் வியாபாரிகள், பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

தஞ்சாவூர்:
தஞ்சை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மல்லித்தழை கட்டுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருந்ததால் வியாபாரிகள், பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
பாம்பு
பொதுவாக பாம்புகள் மனிதர்களை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்து அவை விலகி செல்கின்றன. ஆனால் பாம்பை கண்டால் மனிதர்கள் அச்சம் கொண்டு ஓடுகின்றனர். ஆனால் சிலர் பாம்புகளை வைத்து வேடிக்கை காட்டுவதும் உண்டு.
சிலர் பாம்பை கண்டால் அடித்து கொல்லுகின்றனர். வயல்வெளிகளில் எலிகளை பிடித்து உணவாக்கி கொள்வதால், சில நேரங்களில் பாம்புகள் விவசாயிகளுக்கு ஒரு வகையில் உதவவும் செய்கின்றன.
பொதுமக்கள் ஓட்டம் 
இந்தநிலையில் நேற்று காலை தஞ்சை தற்காலிக மார்க்கெட்டில் வியாபாரியிடம் ஒருவர் மல்லித்தழை கேட்டுள்ளார். அப்போது வியாபாரி அருகில் இருந்த மல்லித்தழை கட்டை எடுத்து பிரிக்க முயன்றார். அப்போது அதில் இருந்து கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சில வியாபாரிகள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்:- 
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல் பாம்பு  மல்லித்தழை கட்டுக்குள் இருந்தது. அந்த பாம்பை வியாபாரிகளே அடித்துள்ளனர். தற்போது மீண்டும் பாம்பு வந்துள்ளதால் அச்சமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Next Story