வேளாண் விற்பனை சந்தை மூலம் 1,008 விவசாயிகள் பயன்


வேளாண் விற்பனை சந்தை மூலம் 1,008 விவசாயிகள் பயன்
x
தினத்தந்தி 11 Sep 2021 7:58 PM GMT (Updated: 11 Sep 2021 7:58 PM GMT)

விருதுநகர் விற்பனை குழுவில் தேசிய வேளாண் சந்தை மூலம் 1008 விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.

விருதுநகர், 
விருதுநகர் விற்பனை குழுவில் தேசிய வேளாண் சந்தை மூலம் 1008 விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாக கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார். 
ஆய்வு 
விருதுநகர் வேளாண்மை பணிக்குழுவில் தேசிய வேளாண் விற்பனை சந்தையை கலெக்டர் மேகநாதரெட்டி நேரடி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் வேளாண் விற்பனை சந்தை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விருதுநகர் வேளாண் விற்பனை குழுவில் ராஜபாளையம் மற்றும் விருதுநகர் விற்பனைக் கூடங்கள், மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் கடந்த ஆண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளது. மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாட்டிற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
தரம் பிரிக்கும் எந்திரம் 
இந்த விற்பனைக்கூடங்களில் இண்டர்நெட் இணைப்பு, கண்காணிப்பு கேமராக்கள், கணிப்பொறிகள் மற்றும் அச்சு எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருள்களை தர மதிப்பீடு செய்யும் உபகரணங்கள் வர பெற்றுள்ளது. மின்னணு ஏலக் கொட்டகை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ராஜபாளையம் விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் தரம்பிரிக்கும் எந்திரம், தேங்காய் நார் உரிக்கும் எந்திரம், விருதுநகர் விற்பனை கூடத்தில் பயறுதரம் பிரிக்கும் எந்திரம் மற்றும் மிளகாய் தூள்அரவை எந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விற்பனை சந்தை 
மேற்கண்ட இரு வேளாண் விற்பனை சந்தைகளிலும் 1,088 விவசாயிகளும், 103 வியாபாரிகளும் பதிவு செய்யப்பட்டு 100 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.31 லட்சம் மதிப்புள்ள 1,334 குவிண்டால் அளவுள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 300 விவசாயிகள் மற்றும் 19 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விவசாயிகள் இந்த வேளாண் விற்பனை சந்தைகளை பயன் படுத்தி பலனடைய வேண்டும்.
 இவ்வாறு கலெக்டர் கூறினார். 
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கரநாராயணன், வேளாண் துணை இயக்குனர் சரஸ்வதி, விற்பனைக் குழு செயலாளர் வேலுசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story