இன்று நடைபெறும் மெகா முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு


இன்று நடைபெறும் மெகா முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:10 PM GMT (Updated: 11 Sep 2021 8:10 PM GMT)

100 சதவீத இலக்கை அடைவதற்கு 1,225 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:
100 சதவீத இலக்கை அடைவதற்கு 1,225 இடங்களில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,225 இடங்களில் முகாம் நடக்கிறது. இதையொட்டி அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், வாக்குச்சாவடிகள், அங்கன்வாடிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு 
இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்றன. இதனை கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், திண்டுக்கல் கலெக்டர் விசாகன் ஆகியோர் நேற்று திண்டுக்கல்லில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி திண்டுக்கல் வர்த்தகர் சங்க கட்டிடம், வாசவி பள்ளியில் முகாமுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளை பார்வையிட்டனர். அப்போது சுகாதார அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன், மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story