அனைத்து விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்


அனைத்து விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Sep 2021 9:52 PM GMT (Updated: 11 Sep 2021 9:52 PM GMT)

திருச்சியில் நடந்த விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்ட்டது.

திருச்சி:

விடுதலை பயணம்
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதையொட்டி “கிசான் சுவராஜ் யாத்ரா” என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு விவசாயிகளின் விடுதலை பயணத்தை ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா' என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த பயணத்தை கன்னியாகுமரியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி அன்று தொடங்கி நவம்பர் மாதம் 26-ந்தேதி டெல்லியை சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளனர். இதில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்க அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகளின் இந்த பயணத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் விவசாயிகள் விடுதலை பயணத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஈசன், குருசாமி, தூரன்நம்பி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மகாராஷ்டிரா விவசாய சங்க தலைவர் விநாயக், தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு, காளிமுத்து, ரவீந்திரன், அரங்க சங்கரய்யா, தளபதி, சுகுமாறன் மற்றும் தஞ்சை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
கூட்ட தொடக்கத்தில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், "டெல்லியில் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று செயல்படுகிறது. அவர்களது ஒப்புதல் இல்லாமல், நீங்களாகவே ஒரு போராட்டத்தை தமிழகத்தில் எப்படி ஏற்பாடு செய்யலாம்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருங்கிணைப்பாளர் குருசாமி பதிலளித்த நிலையில், இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த மற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் அவர்களை சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது, பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கூட்ட முடிவில், விவசாயிகளின் இந்த பயணத்துக்கு அரசு அனுமதி அளிக்காததால், கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன் தமிழக விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு அக்டோபர் 2-ந்தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Next Story