நீட் தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவிகளை வேன்களில் அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்


நீட் தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவிகளை  வேன்களில் அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்
x
தினத்தந்தி 12 Sep 2021 6:16 PM GMT (Updated: 12 Sep 2021 6:16 PM GMT)

நீட் தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவிகளை வேன்களில் பள்ளி நிர்வாகம் அழைத்து சென்றது.

கீரமங்கலம்:
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த நீட் தேர்விற்கு கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 55 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர். இவர்களுக்கு திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையங்கள் போடப்பட்டிருந்ததால் மாணவிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன்கள் ஏற்பாடு செய்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாதுகாப்பில் அனுப்பி வைத்தனர். முன்னதாக மாணவிகளுக்கு பதற்றத்தை குறைக்க அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் கூறுகையில், கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 11 பேர் தேர்ச்சி பெற்று 4 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதே போல இந்த வருடமும் 55 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம். மேலும் கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் படித்த மாணவிகள் 11 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவம் படிக்க செல்வார்கள் என்றார்.

Next Story