திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை


திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை
x
தினத்தந்தி 12 Sep 2021 8:34 PM GMT (Updated: 12 Sep 2021 8:34 PM GMT)

மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.

விருதுநகர்,
மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்தார்.
முன்னேற துடிக்கும் மாவட்டம்
அருப்புக்கோட்டையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
விருதுநகர் மாவட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முன்னேற துடிக்கும் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நான் 3-வது முறையாக இம்மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்துள்ளேன். இம்மாவட்டம் பல்வேறு காரணிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும் 2 காரணிகளில் மட்டும் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படவில்லை. எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு சில பிரச்சினைகள் உள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்காக தேசிய மின்னணு சந்தை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது இந்த மாவட்டத்தில்  7 விற்பனைக்கூடங்களும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 
நடமாடும் ஆம்புலன்ஸ் 
இதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி முருகன், மத்திய நிதி மந்திரி மீனவ பெண்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கால்நடை துறைக்கு பிரதமர் ரூ.53 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 இதுகுறித்து தொடர்ந்து பேசிய மத்தியநிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விருதுநகர் மாவட்டத்தில் நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 
பெட்ரோல், டீசல் விலைைய ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குள் உட்படுத்த அதற்கான குழு பரிந்துரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 
மதுரை- தூத்துக்குடி அகல ெரயில் பாதை திட்டத்திற்கு மத்திய ெரயில்வே அமைச்சரிடம் பேசி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படும். தற்போது பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய நிதி திரட்டல் என்ற பெயரில் மத்திய அரசு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்ய கூடியதை ஏற்பதற்கில்லை. முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தான், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தான் டெல்லி ெரயில் நிலையம் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது இதை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.
பட்டாசு தொழில் 
பட்டாசு தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என பட்டாசு தொழில் நடத்துவோர் கூறிவந்தாலும் பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு என கூறி என்னை 2 முறை சந்தித்தபோது சீனாவில் இருந்துபட்டாசு இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார்கள். உடனடியாக சீனாவில் இருந்து பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டறிந்து அதனை தடை செய்தோம். பட்டாசு தொழில் செய்வோர் தங்கள் பிரச்சினை குறித்து மத்திய மந்திரிகளை சந்திப்பதில் எந்த தடையும் இல்லை. எப்போதும் சந்தித்து தங்கள் பிரச்சினைகளை முறையிடலாம். பட்டாசு தொழிலுக்கு பிரச்சனை என்பது கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே கோர்ட்டுகள் தான் தீர்வு காண வேண்டும்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள எம்.பி.க்களுக்கு உரிய காலத்தில் தகவல் அனுப்பப்படவில்லை என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. கடந்த 8-ந் தேதியே தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு எங்கள் துறை மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தான் எம்.பி.க்களுக்கு, எம்.எல்.ஏ.களுக்கு தகவல் அனுப்பி இருக்க வேண்டும். எனவே இதில் மரபுமீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை என கருத்தை தெரிவித்து உள்ளேன்.
மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.  
பேட்டியின் போது மத்திய இணை மந்திரி முருகன்,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குனர் பார்த்தா பிரதிம் சென் குப்தா ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story