மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்


மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Sep 2021 9:46 PM GMT (Updated: 12 Sep 2021 9:46 PM GMT)

மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

அரியலூர்:

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று 193 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 400 இடங்களிலும் நடந்தது. முகாமிற்கு வந்தவர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டு 84 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெற்ற இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. சில இடங்களில் முகாம் இரவு 8.30 மணி வரை செயல்பட்டது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சில முகாம்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், முகாம் சீக்கிரமே முடிந்து விட்டது. இதனால் அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 600 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தன. இதில் அரியலூர் மாவட்டத்தில் 39 ஆயிரத்து 386 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் இலக்கை நெருங்கியிருந்தாலும், அதனை எட்டவில்லை. தடுப்பூசி முகாமிற்கான பணியில் 3,387 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் 24 ஆயிரத்து 82 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி முகாமிற்கான பணியில் 1,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது. இதனால் அந்த முகாமிற்கு தடுப்பூசி போட ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.


Next Story