திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2021 4:14 PM GMT (Updated: 13 Sep 2021 4:14 PM GMT)

விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் பண்ணை குட்டைகைள் அமைக்கும் பணிகளுக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து மனித உழைப்பை பயன்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொம்மை பொக்லைன் எந்திரங்களை வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி புருசோத்தமன் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21 நிதியாண்டில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் 1,121 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்தப் பணிகள் அனைத்தும் எந்திரம் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது. 

தேசிய வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் மூலம் செய்யப்பட வேண்டிய இந்த பண்ணைக் குட்டை வேலைகளை மனித உழைப்பின்றி எந்திரங்களின் மூலம் செய்யபட்டு வருவதால் 100 நாள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளமாக ரூ.73 வழங்கி வருகின்றனர். இது 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி மொழி திட்டத்தின் விதிகளுக்கு முரணானது. எனவே பண்ணை குட்டை அமைக்கும் பணிகளில் எந்திரங்களை பயன்படுத்தாமல் மனித உழைப்பை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story