வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
x
தினத்தந்தி 13 Sep 2021 4:38 PM GMT (Updated: 13 Sep 2021 4:38 PM GMT)

வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தளி,
வாளவாடி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்காச்சோளப்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கருகும் நிலை
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது.  கடந்த மாதம் தொடக்கத்தில் 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு மற்றும் காய்கறிகள் சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். தற்போது முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பத்தின் தாக்குதல் காரணமாக பி.ஏ.பி. பாசனத்தின் தரிசு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து வாளவாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் முறையற்ற நீர்மேலாண்மை, கால்வாய் பராமரிப்பு இல்லாதது, தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால் தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.இதனால் கடைமடை நிலங்களுக்கும் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒரு மாதத்திற்கு ஒருமுறை ஒரு சுற்று தண்ணீர் வழங்கப்படுவதால் தரிசு நிலத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை கொண்ட விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து விடுகின்றனர்.இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
.பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகள், காற்றாலை அமைத்தல் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.அதை ஆயக்கட்டில் இருந்து நீக்கினால் தற்போது வழங்கப்படுகின்ற 5 சுற்றுகளுடன் சேர்த்து கூடுதலாக 5 சுற்றுகள் தண்ணீர் வழங்க முடியும். இதனால் 7 நாள் அடைப்பு 7 நாள் திறப்பு என்ற முறையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கலாம். பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து கூடுதல் விளைச்சலை அளிக்கும்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பி.ஏ.பி. திட்டம் கேள்விக்குறியாவதுடன் விவசாயிகளும் தொடர்ந்து நஷ்டமடைந்து வருவதுடன் தொழிலை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து தண்ணீர் திருட்டை தடுப்பதுடன் கடைமடை வரை தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு தெரிவித்தனர்.

Next Story