மனைவி மீது கோபத்தால் தற்கொலை செய்த தொழிலாளி


மனைவி மீது கோபத்தால் தற்கொலை செய்த தொழிலாளி
x
தினத்தந்தி 13 Sep 2021 5:32 PM GMT (Updated: 13 Sep 2021 5:32 PM GMT)

மனைவி மீது கோபத்தால் தற்கொலை செய்த தொழிலாளி

கோவை, 

குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும். ஆனால் புரிதல் இருந்தால்தான்  வாழ்க்கை இனிக்கும். கணவன்,  மனைவிக்கு இடையே ஊடல்,கூடல் என்பது தான் வாழ்வியல் இன்பம்.  ஆனால் கல்லானாலும்  கணவன், புல்லானாலும்  புருஷன்  என்று மனைவி  நினைத்தாலும், கல் நெஞ்சம்  மாறாமல் கணவன் இருந்தால் என்ன  செய்வது?

 கோபம் என்பது சுபாபமாக இருந்தாலும் அதற்கும்  நியாயம் வேண்டும்  அல்லவா? ஆனால் ஆசையாக அனுபவித்து வாழ  வேண்டிய வாழ்க்கையில்  வெறும் தோசையால் உறவின் அன்பை மறந்து உயிரை மாய்த்த  சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. அது பற்றி பார்க்கலாம்:-

கட்டிட  தொழிலாளி

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 52), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மாதவி (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பழனிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. 

இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து உள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்ற பழனி, இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

 இதனால் அவரை மனைவி கண்டித்து உள்ளார். இதன் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கருகிய தோசை

இருந்தபோதிலும் மாதவி, தனது கணவருக்கு சாப்பிட தோசை சுட்டுக்கொண்டு கொடுத்தார். தகராறுக்கு மத்தியில் அவர் தோசை சுட்டுக்கொடுத்ததால் அதில் ஒரு தோசை லேசாக கருகியதாக தெரிகிறது.

 அதை மாதவி கவனிக்காமல் கணவருக்கு பரிமாறி உள்ளார். 
இதை பார்த்த பழனி தனது மனைவியிடம், தோசை கூட ஒழுங்கா சுட தெரியாதா என்று கேட்டு தகராறு செய்தார். 

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனி அறைக்குள் சென்று உள் பக்கமாக பூட்டிக்கொண்டார். 

தூக்குப்போட்டு தற்கொலை 

நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மாதவி, கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் பழனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
பலமுறை முயற்சி 

இது குறித்து போலீசார் கூறும்போது, பழனி ஏற்கனவே பலமுறை தற்கொலைக்கு முயன்று உள்ளார். சம்பவம் நடந்த அன்று அவர் தற்கொலை செய்ய உள்ளதாக கூறிவிட்டு கதவை பூட்டி உள்ளார். 

ஆனால் அவர் தற்கொலை செய்ய மாட்டார் என்று அவருடைய மனைவி நினைத்து உள்ளார். ஆனால் அவர் தற்கொலை செய்து உள்ளார் என்றனர். 
கருகிய தோசைக்காக கணவனின் கோபம் தற்கொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story