20-ந்தேதி தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 13 Sep 2021 5:35 PM GMT (Updated: 13 Sep 2021 5:35 PM GMT)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி தி.மு.க.வினர் தங்களது வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்
செயற்குழு கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் வரவேற்றார். நாளை (புதன்கிழமை) தி.மு.க. சார்பில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவின் காணொலி கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசே எதிர்த்தும் வருகிற 20-ந் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை கட்சியினர் அனைவரும் தங்களது வீடுகள் முன்பு நடத்திட வேண்டும். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிம் திமு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
 மவுன அஞ்சலி
 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் சாதனைக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ததற்கும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு சிவசங்கருக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்த தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி.க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரியின் மறைவிற்கும், கட்சியினர், அவர்களின் உறவினர்கள் மறைவிற்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் கட்சியின் சிறுபான்மையினர் அணி மாவட்ட அமைப்பாளர் பாரி முகமது நன்றி கூறினார்.

Next Story