செய்யாறு அருகே பண்ணை குட்டை தோண்டியபோது புதையல் கிடைத்ததாக பரபரப்பு


செய்யாறு அருகே பண்ணை குட்டை தோண்டியபோது புதையல் கிடைத்ததாக பரபரப்பு
x

செய்யாறு அருகே பண்ணை குட்டைதோண்டியபோது 3 பானைகள் கிடைத்தது. இதனால் புதையல் கிடைத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு

செய்யாறு அருகே பண்ணை குட்டைதோண்டியபோது 3 பானைகள் கிடைத்தது. இதனால் புதையல் கிடைத்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3 பானைகள் கிடைத்தது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தண்டரை கிராமத்தில் சேகர் என்பவரது நிலத்தில் அரசு மானியம் மூலம் மீன் பண்ணை குட்டை அமைக்கும் பணி செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பண்ணைகுட்டைக்காக ஆட்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். மண்வெட்டியால் மண்ணை தோண்டியபோது மண்ணில் பானை போன்ற பொருள் புதைந்து இருப்பது தெரியவந்தது. அது புதையலாக இருக்கலாம் என எண்ணிய பணியாளர்கள் அதனை பக்குவமாக தோண்ட ஆரம்பித்துள்ளனர். 

இதற்கிடையே பண்ணைகுட்டை தோண்டியபோது புதையல் கிடைத்துள்ளதாக கிராமத்தில் தகவல் பரவியது. இதனால் கிராம மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் செய்யாறு தாசில்தார் திருமலை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சுமார் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பார்த்தபோது மண்ணில் புதையுண்ட நிலையில் கருப்பு நிறத்தில் இரண்டு பானைகளும், செம்மண் நிறத்தில் ஒரு பானையும், சுமார் 2 அடி உயரமும், 2 அடி அகலத்தில் மண்ணால் செய்யப்பட்ட தொட்டியும் இருப்பது தெரியவந்தது. 

புதையல் இல்லை

அதை தோண்டி எடுக்கும்போதே சேதமடைந்தன. பானைகளில் எதுவும் இல்லை. தோண்டி எடுக்கப்பட்ட 3 பானைகளும், தொட்டியும் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பூமிக்கடியில் கிடைத்த தொட்டியும், 3 பானைகளும் எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து கண்டறிய வருவாய் துறையினர் வேலூரில் செயல்பட்டு வரும் தொல்லியல் துறை அருங்காட்சியகத்திற்கு தெரிவித்துள்ளனர். தொல்லியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பூமிக்கடியில் தோண்டப்பட்ட மண் பானைகள் தொன்மையானதா தற்போதைய காலகட்டத்தில் செய்யப்பட்டதா என்பதை குறித்து ஆய்வு செய்தபிறகுதான் அதனின் தன்மை தெரியவரும். 

மேலும் பூமிக்கடியில் பானைகள் தென்பட்டதும் புதையல் கிடைத்துவிட்டதாக அங்கு திரண்ட கிராம மக்கள் அதனை தோண்டி பார்த்தபோது பானையில் வெறும் மண் இருப்பதை பார்த்து ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.

Next Story