பள்ளிபாளையம் அருகே கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை


பள்ளிபாளையம் அருகே கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Sep 2021 6:23 PM GMT (Updated: 13 Sep 2021 6:23 PM GMT)

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிபாளையம்:
கல்லூரி மாணவர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 21). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. உயிர் தொழில் நுட்பவியல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கோவிந்தராஜ் நேற்று காலை தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். இந்தநிலையில் மாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அவருடைய கல்லூரி அடையாள அட்டை, பை கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து அவரை தேடினர். அப்போது கோவிந்தராஜ் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிந்தது. பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் அவருடைய பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தொடர்ந்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story