தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் கலெக்டர் திவ்யதர்சினி தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2021 6:23 PM GMT (Updated: 13 Sep 2021 6:23 PM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 6¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
குடற்புழு நீக்க மாத்திரைகள்
தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் திவ்யதர்சினி கலந்து கொண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்குமார், தர்மபுரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்ரீசுகந்த பிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 6.39 லட்சம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகி்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கட்டாயம் வழங்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 4.88 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெற உள்ளன.
சிறப்பு முகாம்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 1,333 அங்கன்வாடி மையங்கள், 231 உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 225 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,840 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. இதில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5.17 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 
மேலும் மாவட்டத்தில் உள்ள 20 வயது முதல் 30 வரை உள்ள சுமார் 1.22 லட்சம் பெண்களுக்கு ரத்த சோகை நோய் தடுப்பதற்காக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. இந்த முகாம்களுக்கு தேவையான அளவு குடற்புழு நீக்க மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story