கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ


கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.
x
கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்த காட்சி.
தினத்தந்தி 13 Sep 2021 7:26 PM GMT (Updated: 13 Sep 2021 7:26 PM GMT)

கரூர் நகராட்சி குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கரூர்,
குப்பைக்கிடங்கு
கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் இருந்து சற்று தொலைவில் நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த குப்பைக்கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையில் கரூர், அரவக்குறிச்சி, புகளூர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
புகை மண்டலம்
எனினும் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி கொண்டே இருந்தது. மேலும் குப்பைகள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் கரூர்-வாங்கல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, போலீசார் பேரிகார்டு அமைத்து வாகன போக்குவரத்தை திருப்பி விட்டனர். 
தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே குளிர்ந்தமலை முனியப்பசாமி கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதி அருகே இருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Related Tags :
Next Story