திருச்சியில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக் கொலை


திருச்சியில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 13 Sep 2021 8:30 PM GMT (Updated: 13 Sep 2021 8:30 PM GMT)

திருச்சியில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி
திருச்சி வாமடம் கல்யாணசுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் நிசாந்த் (வயது 23). காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் 4 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே நிசாந்த் துடிதுடித்து இறந்தார்.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழிக்குப் பழியாக நடந்ததா?
இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட நிசாந்த் உள்ளிட்ட சிலர் கடந்த ஆண்டு திருச்சி வாமடம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 
இந்த கொலை வழக்கு தொடர்பாக தில்லைநகர் போலீசார் நிசாந்த் மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆகவே, பழிக்குக் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நிசாந்தின் உறவினர்கள் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் சக தொழிலாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் தரப்பில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவாா்கள் என்று கூறப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். 
இந்தநிலையில் திருச்சி குப்பாங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story