விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் தேனி கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயற்சி கால அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு


விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் தேனி கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயற்சி கால அவகாசம் கேட்டதால் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 2:05 PM GMT (Updated: 14 Sep 2021 2:05 PM GMT)

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் தேனி கலெக்டர் காரை ஜப்தி செய்ய கோர்ட்டு பணியாளர்கள் வந்தனர். கலெக்டர் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பெருமாள் தேனி பங்களாமேடு பகுதியில் மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஜீப் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கணவரை இழந்த மகேஸ்வரி இழப்பீடு கேட்டு மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை தொடர்ந்து, மகேஸ்வரி மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு அரசு ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 454 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
இதையடுத்து மகேஸ்வரி தேனி மாவட்ட கூடுதல் விரைவு கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் வட்டியுடன் கூடிய இழப்பீட்டு தொகை ரூ.14 லட்சத்துக்கு பதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான ஒரு கார், தலா ரூ.3 லட்சம் மதிப்பில் 2 கார்கள் மற்றும் ரூ.1 லட்சம் தொகைக்காக 3 ஏ.சி. எந்திரங்கள் ஆகியவற்றை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

ஜப்தி செய்ய முயற்சி

இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கோர்ட்டு பணியாளர்கள் 2 பேர் மற்றும் மனுதாரரின் வக்கீல் ஜாக்லால் கான் ஆகியோர் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவை சந்தித்து கலெக்டரின் காரை ஜப்தி செய்ய போவதாக கூறினர். மேலும் ஜப்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கலெக்டர் முரளிதரனிடம், நேர்முக உதவியாளர் (பொது) ராஜா கலந்தாலோசனை செய்தார். பின்னர் ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு பணியாளர்களிடம் நேர்முக உதவியாளர் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இழப்பீடு வழங்க கலெக்டர் சார்பில் அவர் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டார். 

இதைத்தொடர்ந்து கோர்ட்டு பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே ஜப்தி நடவடிக்கை என்றதும் கலெக்டரின் காரை அதன் டிரைவர் அங்கிருந்து வெளியே எடுத்து சென்று விட்டார். ஜப்தி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதை அறிந்ததும் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு அந்த கார் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story