தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 லாரிகள், கார் மோதியதில் 2 பேர் பரிதாப சாவு 11 பேர் படுகாயம்


தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 லாரிகள், கார் மோதியதில் 2 பேர் பரிதாப சாவு 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:14 PM GMT (Updated: 14 Sep 2021 5:14 PM GMT)

தொப்பூர் கணவாயில் தாறுமாறாக ஓடிய லாரி முன்னால் சென்ற 3 லாரிகள், கார் மீது மோதியது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் தாறுமாறாக ஓடிய லாரி முன்னால் சென்ற 3 லாரிகள், கார் மீது மோதியது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாறுமாறாக ஓடிய லாரி
குஜராத்தில் இருந்து அவிநாசிக்கு உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த சித்தையன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த பிரதாப் சத்ரியன் (35) என்பவர் உடன் வந்தார். 
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு லாரி வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற கார் மற்றும் வேலிக்கற்கள் ஏற்றி சென்ற லாரி, கன்டெய்னர் லாரி, செப்டிக் டேங்க் லாரி ஆகியவை மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 லாரிகள் சாலையிலும், மற்ற 2 லாரிகள் சாலையோர பள்ளத்திலும் கவிழ்ந்தன. இதில் வேலிக்கற்கள் சாலையில் சிதறின. மேலும் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி கவிழ்ந்தது.
2 பேர் பலி
இந்த விபத்தில் செப்டிக் டேங்க் லாரியில் வந்த திருச்சி மாவட்டம் எடமலப்பட்டிபுதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரத்தினவேல் (24), உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவர் சித்தையன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் செப்டிக் டேங்க் லாரியில் வந்த திருச்சி மாவட்டம் எடமலப்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களான பாண்டியன் (30), பகவதிராஜ் (24), குஞ்சுமணி (25), மதன்குமார் (27), லாரன்ஸ் (24), பிரகாஷ் (26), சங்கர் (28), மதன்குமார் (23), லூகாஷ் (29), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் மாரியப்பன் (28), ரஞ்சித்குமார் (30) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னர் போலீசார் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சேலம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story