கடைக்காரர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்


கடைக்காரர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்
x
தினத்தந்தி 14 Sep 2021 6:04 PM GMT (Updated: 14 Sep 2021 6:04 PM GMT)

குன்னத்தூர் பகுதியில் மளிகை கடைக்காரர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் ஒன்று வந்துள்ளது. எனவே கடைக்காரர்களும், பொதுமக்களும் உஷாராக இருக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குன்னத்தூர்
குன்னத்தூர் பகுதியில் மளிகை கடைக்காரர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் ஒன்று வந்துள்ளது. எனவே கடைக்காரர்களும், பொதுமக்களும் உஷாராக இருக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட மாநில பெண்கள்
குன்னத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குன்னத்தூர் பேரூராட்சி மற்றும் 17 சிற்றூராட்சிகள் உள்ளது. இந்த  பகுதிக்கு 10க்கும்  மேற்பட்ட வட மாநில பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் வாங்கிக்கொண்டு 500 ரூபாய் அல்லது 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்கள்.
 ‌ பொருள்களுக்கு போக மீதித் தொகையை கடைக்காரர்கள் கொடுத்தால் பணத்தை பெற்றுக் கொண்ட வட மாநில பெண்கள் அதில் 200 அல்லது 300 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். பின்னர் பொருட்கள் பிடிக்கவில்லை என்று பொருட்களைக் திருப்பிக் கொடுத்து சில்லறையை கொடுக்கும்போது குறைவாக பணம் உள்ளது என்று கடைக்காரர் கேட்டால் நீங்கள் கொடுத்தது இவ்வளவுதான் கொடுத்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். 
உஷாராக இருக்க வேண்டுகோள்
வேறு சில கடைகளில் கும்பலாக சென்று கடைக்காரர்களின் கவனத்தை திசை திருப்பி கல்லாவில் உள்ள பணத்தை திருடி விடுகிறார்கள். சந்தைகளுக்கு சென்று, 2 பெண்கள் கடைக்காரரிடம் பொருட்களை பேரம் பேசுவது போல் நடித்துக்கொண்டு மற்ற பெண்கள் கடைகளில் வைத்திருக்கும் பொருள்களையும் திருடி கொள்கிறார்கள். 
மேலும் கிராம பகுதிகளில் வெள்ளி கொலுசிற்கு பாலீஸ் போடுவதாகவும், கெடிகாரம் விற்பனை செய்வது போலும் வலம் வந்து கொண்டு உள்ளார்கள். ஆகவே இத்தகைய வடமாநில பெண்களிடம் உஷாராக இருந்து கொண்டு அவர்கள் உங்கள் பகுதிகளுக்கு வந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டி பொதுமக்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story