விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது


விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது
x
தினத்தந்தி 14 Sep 2021 7:52 PM GMT (Updated: 14 Sep 2021 7:52 PM GMT)

பண்ருட்டி அருகே பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.12½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நண்டுக்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 49). விவசாயி. இவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதற்கான நடவடிக்கைகளை காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்தார். இதையடுத்து பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்காக ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளியை அணுகினார்.  அப்போது செண்பகவள்ளி, பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றும், பணம் தரவில்லையென்றால் பட்டா மாற்றம் செய்து தரமுடியாது எனவும் ஹரிகிருஷ்ணனிடம் கூறினார்.  அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.2 ஆயிரத்தை குறைத்து கொண்டு ரூ.8 ஆயிரம் தருமாறு செண்பகவள்ளி ஹரிகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். 

ரூ.8 ஆயிரம்

இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ஹரிகிருஷ்ணன் நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த செண்பகவள்ளியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.8 ஆயிரத்தை கொடுத்தார். 
அதை செண்பகவள்ளி வாங்கிய போது, அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மெல்வின்சிங் தலைமையிலான போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள செண்பகவள்ளியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.12½ லட்சம் வீட்டில் இருந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story