பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது


பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
x
தினத்தந்தி 14 Sep 2021 8:32 PM GMT (Updated: 14 Sep 2021 8:32 PM GMT)

திண்டுக்கல் அருகே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. தண்டவாளத்தில் கல்லை வைத்த சிறுவர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்: 

பாலக்காடு எக்ஸ்பிரஸ்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று இரவு 8 மணிக்கு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்-அனுமந்தநகர் இடையே வந்து கொண்டு இருந்தது. ரெயில் நிலையத்தின் அருகில் என்பதால் மெதுவாக வந்தது. அப்போது குளிர்சாதன பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ ‌உரசுவது போன்று சத்தம் கேட்டது.

இதை தொடர்ந்து என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை பிரேக் போட்டு ‌அங்கேயே நிறுத்தினார். பின்னர் அவர் கீழே இறங்கி ‌பார்த்தார். அங்கு குளிர்சாதன பெட்டியின் கீழே உள்ள ‌சிறிய பெட்டி ஒரு கல் மீது உரசியபடி நின்றது.

தப்பியது
இது ‌குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் ரெயில்வே ஊழியர்கள் வந்து அந்த கல்லை அகற்றினர். 


ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் ஸ்டம்புக்கு பதிலாக தண்டவாளத்தில் கல்லை வைத்து விளையாடி உள்ளனர். கிரிக்கெட் விளையாடி விட்டு திரும்பி செல்லும்போது தண்டவாளத்தில் வைத்த கல்லை எடுக்காமல் சென்று உள்ளனர். அந்த கல் மீது ரெயில் பெட்டி உரசியது தெரியவந்தது.

இதையடுத்து 15 நிமிடங்கள் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.‌ அதேநேரம் நல்லவேளையாக மெதுவாக ரெயில் வந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு ரெயில்  தப்பியது. ‌மேலும்‌ ‌தண்டவாளத்தில் கல்லை வைத்த சிறுவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.‌

Next Story