மத்திய அரசை கண்டித்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2021 12:16 AM GMT (Updated: 15 Sep 2021 12:16 AM GMT)

மத்திய அரசை கண்டித்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசு பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய-மாநில அரசுகளின் அனைத்து பணி பிரிவுகளிலும் 4 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஐ.பி.எஸ், ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட மத்திய போலீஸ் படைகளில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பாதுகாப்புத்துறை சார்ந்த பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை பறிப்பதுடன், இனி வரும் காலங்களில் புதிதாக எந்த ஒரு மாற்றுத்திறனாளிகளும் பாதுகாப்புத்துறைகளில் எந்தவொரு பணிக்கும் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story