தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sep 2021 2:21 PM GMT (Updated: 15 Sep 2021 2:21 PM GMT)

கோவில்பட்டியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க மாநில தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
வணிக இலக்கு என்ற பெயரில் இந்தியா போஸ்டல் பேமண்ட் பேங்க், வேறு வங்கியில் உள்ள பணத்தை ஆதார் அட்டை மூலம் பணம் எடுத்துக் கொடுக்கும் பணி, தங்கப்பத்திரம் விற்பனை, ஆதார் அட்டை எடுக்கும் பணி, அஞ்சல் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் காப்பீடு, அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது ஆகியவற்றில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயிப்பதை கண்டித்தும், இலக்குகளை நிறைவேற்ற வேண்டும் என மிரட்டி அஞ்சல் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டச் செயலர்கள் அருள்ராஜன் (அஞ்சல் 3), பெரியசாமி (அஞ்சல் 4), பாலசுப்பிரமணியன் (கிராமப்புற அஞ்சல்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க கோட்டச் செயலர் சுப்பையா வாழ்த்திப் பேசினார்.
இதில், கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களைச் சேர்ந்த அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள், மூன்றாம் பிரிவு, தபால்காரர், நான்காம் பிரிவு மற்றும் அகில இந்திய அஞ்சல் கிராமப்புற ஊழியர் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story