கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் பறிமுதல்


கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sep 2021 3:11 PM GMT (Updated: 15 Sep 2021 3:11 PM GMT)

கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் பறிமுதல்

ஊட்டி

ஊட்டியில் கெட்டுப்போன 400 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.46 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 10 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மீன் கடைகளில் ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பொதுமக்களுக்கு தரமற்ற அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை, மீன் வளத்துறை ஆகிய 2 துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஊட்டியில் உள்ள மீன் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

 இதில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கணேச நேரு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ், ஊட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் மற்றும் ஊழியர்கள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், மணிகூண்டு, மெயின் பஜார், சேரிங்கிராஸ் ஆகிய பகுதிகளில் உள்ள 20 மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் பார்மலின் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 10 கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிலோ மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ரூ.46 ஆயிரம் அபராதம்

அதில் கடைகளை சுகாதாரமாக வைக்க வேண்டும். தரமான மீன்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மீன்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூ.2,000 என ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.46 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் கூறும்போது, உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியானது ஆய்வில் தெரியவந்தது. உரிய நாட்களில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என்றார்.

Next Story