இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை


இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 15 Sep 2021 7:23 PM GMT (Updated: 15 Sep 2021 7:23 PM GMT)

கடலூரில் இரும்பு கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர், 

கடலூர் எஸ்.என்.சாவடி சிவசக்தி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 47). இரும்பு கடை வைத்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளரான இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் தனது மகளை விடுவதற்காக குடும்பத்துடன் சென்றார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது பற்றி முகமது இஸ்மாயிலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வந்து தனது வீட்டுக்குள்சென்று பார்த்தார்.

ரூ.1 லட்சம்

அங்கே அவரது வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் அவர் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.20 ஆயிரம், 750 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள், முகமது இஸ்மாயில் சென்னை சென்றதை அறிந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது பற்றி முகமது இஸ்மாயில் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த முக்கிய ரேகைகளை பதிவு செய்தனர்.
இதேபோல் மற்றொரு வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

செல்போன்கள் திருட்டு

கடலூர் செம்மண்டலம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி சுமதி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்ததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 2 செல்போன்களை திருடிச்சென்றுள்ளனர். இது பற்றி புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story