பொது வினியோக திட்ட கிடங்கின் இடமாற்றத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சாலை மறியல்


பொது வினியோக திட்ட கிடங்கின் இடமாற்றத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Sep 2021 6:38 PM GMT (Updated: 17 Sep 2021 6:38 PM GMT)

முத்துப்பேட்டையை அடுத்த கீழபாண்டியில் பொது வினியோக திட்ட கிடங்கின் இடமாற்றத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த கீழபாண்டியில் பொது வினியோக திட்ட கிடங்கின் இடமாற்றத்தை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த கீழபாண்டியில் உள்ள பொதுவினியோக திட்ட கிடங்கினை இடமாற்றம் செய்வதை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமை தாங்கினார் கட்டுமான சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, சுமைதூக்கும் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லெனின், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் ராஜேந்திரன், முறைசாரா சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டு, சாலை மறியல் தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பொது வினியோக திட்ட கிடங்கு கட்டிடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவே இடம் மாற்றம் செய்யப்படுகிறது. அதனால் மீண்டும் அதே இடத்தில் இயங்கும் என்றனர்.
3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அப்படி இருந்தும் உடன்படாமல் மறியலில் ஈடுபட்டவர்கள் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட போராட்டமாக திருவாரூர் எஸ்.ஆர்.எம். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமாக நடைபெறும் என்று அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story