போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 17 Sep 2021 8:14 PM GMT (Updated: 17 Sep 2021 8:14 PM GMT)

சோமரசம்பேட்டை அருகே போதையில் மொபட்டை எரித்து ரகளையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சோமரசம்பேட்டை, செப்.18-
சோமரசம்பேட்டை அருகே போதையில் மொபட்டை எரித்து ரகளையில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்ற போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
போதையில் மொபட்டை எரித்து ரகளை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கீழ சவேரியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜூலியட் சாந்தகுமார் (வயது 45). நேற்று மாலை போதையில் இருந்த இவர், சுண்ணாம்புக்காரன்பட்டி அருகே தனது மொபட்டை நடுரோட்டில் நிறுத்தி தீ வைத்து எரித்தார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் அவரை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டார். அத்துடன் அவரை சமாதானப்படுத்த முயன்ற போது தன்னைத்தானே கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்றுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து
பின்னர் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஜூலியட் சாந்தகுமாரை பிடித்த போது, அவர் தான் வைத்து இருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை இடது தோள்பட்டையில் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
உடன் சென்ற போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். அப்போது அவர்களையும் ஜூலியட் சாந்தகுமார் தாக்கினார். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கத்தியால் தன்னைத்தானே கிழித்ததில் காயம் அடைந்த ஜூலியட் சாந்தகுமாரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல்
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அத்துடன் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story