புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 Sep 2021 5:51 PM GMT (Updated: 18 Sep 2021 5:51 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி:
ஆண்டுதோறும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்த சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனால் நேற்று தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலையில் கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் பெருமாள் கோவிலின் வாசலில் நின்று பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story