வேப்பனப்பள்ளி அருகே பயங்கரம் விவசாயி வெட்டிக்கொலை காரில் வந்த நபர்கள் வெறிச்செயல்


வேப்பனப்பள்ளி அருகே பயங்கரம் விவசாயி வெட்டிக்கொலை காரில் வந்த நபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Sep 2021 7:29 PM GMT (Updated: 18 Sep 2021 7:29 PM GMT)

வேப்பனப்பள்ளி அருகே காரில் வந்த மர்ம நபர்கள் விவசாயியை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே காரில் வந்த மர்ம நபர்கள் விவசாயியை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடப்பன் (வயது 66). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. நேற்று காலை 7 மணி அளவில் அவர் தனது வீட்டில் இருந்து தக்காளி தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரில் மர்ம நபர்கள் 5 பேர் இருந்தனர். அவர்கள் வெங்கடப்பனை வழிமறித்தனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த நபர்கள் விடாமல் வெங்கடப்பனை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர் இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அவரை கொலை செய்ததும் அந்த நபர்கள் காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஒருவர் பிடிபட்டார்
இந்த நிலையில் வெங்கடப்பன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கடப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக வெங்கடப்பனின் இறந்து போன மருமகள் ஜமுனாவின் தம்பி கார்த்திக் என்பவரை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி அருகே விவசாயியை காரில் வந்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story