சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை: கர்ப்பிணி, கள்ளக்காதலனுடன் கைது-பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை: கர்ப்பிணி, கள்ளக்காதலனுடன் கைது-பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 18 Sep 2021 10:46 PM GMT (Updated: 18 Sep 2021 10:46 PM GMT)

சேலத்தில் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கர்ப்பிணி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். இவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சேலம்:
சேலத்தில் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கர்ப்பிணி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். இவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தொழிலாளி கொலை
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி(வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகேசன் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கலைமணிக்கு அதே பகுதியை சேர்ந்த கலையரசன், தறித்தொழிலாளி கிருபைராஜ் ஆகியோர்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 
இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கந்தாஸ்ரமம் கோவில் அருகே உள்ள மலையடிவாரம் பகுதியில் கலையரசனுக்கும், கிருபைராஜீக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கிருபைராஜை, கலையரசன் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த கொலை குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
2 பேர் கைது
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலகுமார் ஆகியோர் கலையரசன், கள்ளக்காதலி கலைமணி ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில் போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- 
சேலம் அயோத்தியாப்பட்டணம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி. இவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கலைமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த கலையரசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் முருகேசனுக்கு தெரியாமல் அவர் கலையரசனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர். 
கர்ப்பமானார் 
இந்தநிலையில் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லுக்கு கலைமணி வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேலைபார்த்த ராம்நகர் பகுதியை சேர்ந்த கிருபைராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதுடன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். கலைமணி 2 பேருடன் இருக்கும் கள்ளக்காதலை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பார்த்து கொண்டார். ஒரு கட்டத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் கலையரசன், கிருபைராஜ் ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலியுடன் யார் வாழ்வது? என்பது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையில் கலைமணி கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். 
இதனால் அவருடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என கலையரசன், கிருபைராஜ் ஆகியோர் போட்டிபோட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கலைமணியும், கிருபைராஜூம் சேலம் கந்தாஸ்ரமம் அருகே உள்ள மலையடிவாரம் பகுதியில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கிருபைராஜ், கலையரசனுக்கு போன் செய்து கலைமணியை நான் திருமணம் செய்து கொண்டு வாழப்போவதாகவும், அவருடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும் கூறினார். 
கழுத்தை அறுத்தார்
மேலும் அவர் இனிமேல் கலைமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும் மிரட்டி உள்ளார். அப்போது கலையரசன் அவரிடம் நான் கலைமணியுடன் உள்ள தொடர்பை விட்டுவிடுவதாக தெரிவித்தார். இதற்கு கிருபைராஜ் அவரிடம், நாங்கள் தற்போது கந்தாஸ்ரமம் பகுதியில் இருப்பதால் நீ அங்கு நேரில் வந்து கலைமணியிடம் இதுகுறித்து கூறிவிடு என்றார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன், கிருபைராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி கத்தியுடன் சம்பவம் இடத்துக்கு வந்தார். 
இதையடுத்து அங்கு கள்ளக்காதலியுடன் யார் வாழ்வது குறித்து அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். மோதலில் கலையரசன் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் கீழே விழுந்த கிருபைராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். கிருபைராஜ் மீது கலைமணிக்கு அதிக பாசம் இருந்ததால் அவருடைய உடலை தனது மடியில் போட்டு கதறி அழுதார். கிருபைராஜை கொலை செய்ததற்காக கலையரசனும், உடந்தையாக இருந்ததாக கலைமணியையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story