கிருஷ்ணகிரியில் குட்டியுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு கேமரா மூலமும் வனத்துறை கண்காணிப்பு


கிருஷ்ணகிரியில் குட்டியுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு கேமரா மூலமும் வனத்துறை கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 6:34 PM GMT (Updated: 19 Sep 2021 6:34 PM GMT)

கிருஷ்ணகிரியில் குட்டியுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் குட்டியுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தைகள், கரடிகள், உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அடிக்கடி ஊருக்குள் வருவது தொடர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகில் சிறுத்தை சுற்றித்திரிவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரில் கூசுமலை பகுதியில் குட்டியுடன், சிறுத்தை ஒன்று சுற்றுவதை பாஞ்சாலியூர் பகுதி கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சிறுத்தை அப்பகுதியில் ஆடுகள், நாய்களை வேட்டையாடி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி வனச்சரகர் மகேந்திரன், வன உயிரின மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ், வன காப்பாளர்கள் தேவானந்தம், கோவிந்தசாமி, ஆறுமுகம், கணபதி, ராஜமாணிக்கம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
கூண்டு வைப்பு
அப்போது அந்த பகுதியில் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடம் அங்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த சிறுத்தை கூசுமலை பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் மலையை சுற்றிலும் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் சிறுத்தையை பிடிக்க நாய் ஒன்று கட்டப்பட்ட கூண்டையும் அந்த பகுதியில் வைத்து வனத்துறையினர் கண்காணிக்கிறார்கள். மேலும் 2 கூண்டுகள் வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story