விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பரில் ரகசிய அறை அமைத்து ரூ.1.50 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்


விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பரில் ரகசிய அறை அமைத்து ரூ.1.50 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2021 5:42 PM GMT (Updated: 20 Sep 2021 5:42 PM GMT)

விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பரில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம், 

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்&இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை பனையபுரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிராக்டரை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். 

அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்த போது அதன் டிப்பரில் ரகசிய அறைகள் அமைத்து அதில் 40 அட்டை பெட்டிகளில் 1,920 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

பின்னர் பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் விக்கிரவாண்டி அருகே விஸ்வரெட்டிப்பாளையத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முரளி (வயது 33) என்பதும், தப்பி ஓடியவர் அதே கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து முரளியை கைது செய்த போலீசார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் டிப்பரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிவக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் பனையபுரம் சோதனைச்சாவடி வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரினுள் 10 அட்டை பெட்டிகளில் 432 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் புதுச்சேரி மாநிலம் செத்திப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (23) என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அய்யனாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த மதுபாட்டில்களை கடத்திச்செல்ல முயன்றனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு அதனை பிடித்த போலீசாரை பாராட்டினார்.


Next Story