விவசாயி கத்தியால் குத்திக்கொலை மேல்மலையனூர் அருகே பரபரப்பு


விவசாயி கத்தியால் குத்திக்கொலை மேல்மலையனூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 20 Sep 2021 5:46 PM GMT (Updated: 20 Sep 2021 5:46 PM GMT)

மேல்மலையனூர் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் மகன் வெங்கடேசன் (வயது 40) , விவசாயி. இவரது மனைவி ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டார். மகள் வித்யாவுடன் வெங்கடேசன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வித்யா பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது தந்தை வெங்கடேசன் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் வெளியே சென்றிருந்த வித்யா தனது வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கு தனது தந்தை வெங்கடேசன் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காரணம் என்ன?

இதுகுறித்து அவர் அக்கம், பக்கத்தினரிடம் தெரிவிக்கவே அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இதுபற்றி அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் வெங்கடேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கடேசனை கொலை செய்த நபர்கள் யார்?

 கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு கொலையாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story