கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண் கைது


கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 20 Sep 2021 8:01 PM GMT (Updated: 20 Sep 2021 8:01 PM GMT)

தஞ்சை அருகே குடும்பத்தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வல்லம்:
தஞ்சை அருகே குடும்பத்தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
கணவர் மீது வெந்நீரை ஊற்றினார்
தஞ்சையை அருகே உள்ள ஆலக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சின்னையன்(வயது 62). விவசாயி. இவருடைய மனைவி வீரம்மாள் (55). கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. 
சம்பவத்தன்றும் வழக்கம்போல் சின்னையனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வீட்டில் வைத்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே கணவர் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த வீரம்மாள், சம்பவத்தன்று ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை பாத்திரத்துடன் எடுத்து வந்து சின்னையன் மீது ஊற்றினார். 
பரிதாப சாவு
இதில் உடல் முழுவதும் வெந்து அலறிதுடித்த சின்னையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சின்னையன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று வீரம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பரபரப்பு
குடும்பத்தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிக்கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் ஆலக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story