ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்


ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 8 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 20 Sep 2021 9:25 PM GMT (Updated: 20 Sep 2021 9:25 PM GMT)

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 8 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர்:

9-ந்தேதி தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும், இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளுக்கும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி வரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு ஒருவரும், 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல்
இந்நிலையில் நேற்று தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 4 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், கோவிலூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தனூர் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையக்குறிச்சி ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், நாகம்பந்தல் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாபூர் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரம்பலூரில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 18-ந்தேதி வரை ஒருவர் மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும்.

Next Story